கேரளாவில் இரு மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து, வடகிழக்கு பருவ மழை தொடங்கி விட்டது. தற்போது, வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் கனமழை அடித்து ஊற்றி வருகிறது.

கேரளாவில் அக்., 21ம் தேதி வரையில் இடியும் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 19ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டிருந்ததால், கனமழை கொட்டி வருகிறது. அதேபோல, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டது. அதிகபட்சமாக 11.5 செ.மீ., முதல் 20.4 செ.மீ., வரையில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, பத்தனம்திட்டா, அலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை (அக்.,17) கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், வயநாடு, காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்போடு இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.