சல்மான் கானை கொல்ல ரூ.25 லட்சம் பேரம்

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ரூ.25 லட்சம் பேரம் பேசியதாக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்து உள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஏப்., 14ம் தேதி அதிகாலை அவர் வீடருகே துப்பாக்கிச்சூடு நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு ஆயத சப்ளை செய்த மேலும் இரண்டு பேரையும் கைது செய்தனர். அதில் குற்றவாளி ஒருவர், சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

நவி மும்பை போலீசார் நீதிமன்றத்தில் 5 பேர் மீது தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறியதாவது: பண்ணை வீட்டில் சல்மான் கானை கொலை செய்வதற்கு ரூ.25 லட்சம் பேரம் பேசப்பட்டு உள்ளது. இந்த பேரத்தை சிறையில் உள்ள ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் பேசி உள்ளான். கொலையில் ஈடுபட புனே, ராய்காட், நவி மும்பை, தானே மற்றும் குஜராத்தில் உள்ள 18 வயதுக்கும் குறைவான சிறார்களை தேர்வு செய்துள்ளனர். பந்த்ரா வீடு, பன்வெல் பண்ணை வீடு, கூர்கான் திரைப்பட நகரில் சல்மான்கானின் நடவடிக்கைகளை 60 முதல் 70 பேர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். 2023 ஆக., முதல் ஏப்.,2024 வரை சல்மான் கானை கொலை செய்வதற்கான அனைத்து திட்டங்களையும் தயாரித்து உள்ளனர்.