நாட்டில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு!

நாட்டில் அரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை நுகர்வோர் விவகார அதிகாரசபை நிர்ணயித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசிக்கான கட்டுப்பாட்டு விலை 220 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் சம்பா அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை 230 ரூபாவாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் விலையைக் குறைப்பதாக அறிவித்த போதிலும், சந்தையில் தற்போது ஒரு கிலோ நாட்டரிசி 225 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், சம்பா அரிசி கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

இதேவேளை, சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதுடன், சில பிரதேசங்களில் ஒரு தேங்காய் 150 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் சில பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் 160 ரூபாய்க்கும் அதிக விலையில் தேங்காய் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி அடுத்த சில நாட்களில் தேங்காய் விலையில் எவ்விதக் குறைவும் ஏற்படாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.