சேர்ந்து வாழ தயாராகும் தனுஷ் ஐஸ்வர்யா

நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து செய்ய முடிவெடுத்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 7ம் தேதி விசாரணைக்கு வந்தபோது தனுசும் ஐஸ்வர்யாவும் ஆஜராகாததால் அதையடுத்து இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 19ம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார்கள். ஆனால் அன்றைய தினமும் தனுஷும், ஐஸ்வர்யாவும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதனால் இந்த வழக்கு மீதான விசாரணையை நவம்பர் இரண்டாம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்திருக்கிறார்.

இந்த நிலையில், ரஜினியின் உடல் நலம் பாதிக்கப்பட்டு சமீபத்தில் அப்பல்லோவில் சிகிச்சை எடுத்ததை அடுத்து அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு விவாகரத்தை திரும்ப பெற வேண்டும் என்று தங்கள் மகள் ஐஸ்வர்யாவை, லதா ரஜினி கேட்டுக்கொண்டு வருவதோடு, தனுஷ் இடத்திலும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறாராம். அதனால் தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ தயாராகி வருவதாக ரஜினி வட்டாரங்களில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

நவம்பர் இரண்டாம் தேதி அவர்களின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது தனுசும், ஐஸ்வர்யாவும் ஆஜராக மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. அதோடு மீண்டும் அவர்கள் இணைந்து இந்த வழக்கை திரும்ப பெறுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.