கர்ப்பிணிகள் மாநாட்டிற்கு வர வேண்டாம்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு வருகிற 27ம் தேதி விக்ரவாண்டியில் நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த மாநாட்டிற்கு யார் யாரெல்லாம் வரக்கூடாது என்பது குறித்து இன்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் விஜய். அந்த அறிக்கையில், ‛மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களும் தொகுதி பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. நம் முதல் மாநில மாநாடு வெற்றி கொள்கை திருவிழாவின் ஏற்பாடுகளில் நீங்கள் தீவிரமாக இருப்பது எனக்கு தெரியும்.

அரசியலில் வெற்றி தோல்விகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அளவிடாமல் ஆழமான அக உணர்வாகவும் கொள்கை கொண்டாட்டமாகவும் அணுகப்போகும் நம்முடைய அந்த தருணங்கள் மாநாட்டில் மேலும் அழகுற அமையட்டும். அரசியல் களத்தில் வாய் மொழியில் வித்தை காட்டுவது நம்முடைய வேலை அன்று, நம்மை பொருத்தவரை செயல்வழி தான் நமது அரசியலுக்கான தாய் மொழி. மாநாட்டு களப்பணிகளில் மட்டுமல்லாமல் நம் ஒட்டுமொத்த அரசியல் காணப்படுகின்றன.

நாம் அரசியல் மையமாக்கப்பட்டவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை மக்கள் மனதில் நீங்கள் உண்டாக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உற்சாகமும் உண்மையான உணர்வும் தவழும் உங்கள் முகங்களை மாநாட்டில் காணப்போகும் அந்த தருணங்களுக்காகவே என் மனம் தவம் செய்தும் காத்துக் கிடக்கிறது. இதை நீங்களும் அறிவீர்கள் என்று எனக்கு தெரியும். இந்த நெகிழ்வான நேரத்தில் முக்கியமான ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். கழகத் தோழர்கள் எல்லோரையும் போலவே கர்ப்பிணி பெண்கள், பள்ளி சிறுவர் சிறுமியர், நீண்ட காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் , முதியவர்கள் பலரும் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து நம் தமிழக வெற்றிக்கழக மாநாட்டை காண திட்டமிட்டு இருப்பர்.

அவர்களின் அந்த ஆவலை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் எல்லோருடனும் அவர்களையும் மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல் தான் எனக்கும் இருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம். மாநாட்டிற்கு அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூர பயணம் அவர்களுக்கு உடல் ரீதியாக சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். ஆதலால் அவர்கள் இவ்வளவு தூரம் வந்து சிரமப்பட்டு வர வேண்டாம் என்று அவர்களின் குடும்ப உறவாகவும் இருக்கும் உரிமையில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஊடக மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக தங்கள் வீடுகளில் இருந்தே நமது வெற்றி கொள்கை திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என்றும் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். மாநாட்டிற்கு வருகின்ற மற்ற அனைவரும் மாநாட்டுக்கு வந்து செல்லும்போது பாதுகாப்புடன் பயணிப்பது மிக மிக முக்கியம். அதேபோல் பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். நாம் எதைச் செய்தாலும் அதில் பொறுப்புணர்வுடன் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பாட்டால்தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும். அரசியலுக்கும் அது பொருந்தும். நாம் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். என்னாலும் இதை ஒரு கட்டுப்பாட்டு விதியாகவே கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,’ என விஜய் அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.