ஹிருணிகா உள்ளிட்ட 14 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 14 சந்தேகநபர்கள் தொடர்பிலான வழக்கினை அடுத்த வருடம் பெப்ரவரி 10ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தன்று குருந்துவத்தை பொலிஸ் பிரிவில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த முறைப்பாடு தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் மேற்படி உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குருந்துவத்தை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

அதேவேளை, பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பில் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே சந்தேகநபர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அரசாங்கத்தை அவமானப்படுத்தும் சதித்திட்டம் எதுவுமில்லை எனவும் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அத்துல ரணகல நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இந்த வழக்கு தொடர்பான கோப்புகள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின், சம்பந்தப்பட்ட வழக்கை அடுத்த வருடம் பெப்ரவரி 10ஆம் திகதி அழைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.