கனடாவில் வெளிநாட்டு பணியாளர்களின் சம்பளம் உயர்வு!

கனடாவில் (Canada) பணியாற்றி வரும் தற்காலிக வெளிநாட்டு பணியாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதனடிப்படையில், கனடிய மத்திய அரசாங்கம் குறைந்தபட்ச மணித்தியால சம்பளத்தை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதிக கூடிய சம்பள திட்டத்தின் கீழ் இவ்வாறு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மறுபுறத்தில் இவ்வாறு சம்பளங்கள் அதிகரிக்கப்படுவதனால் தொழில் தருணர்கள் அதிக அளவு உள்நாட்டு கனேடியர்களை பணியில் அமர்த்த கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மாகாணத்தின் அடிப்படை மணித்தியால சம்பளத்தை விடவும் 20% சம்பளம் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் எட்டாம் திகதி முதல் இந்த சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கம் வெளிநாட்டு பணியாளர்களை விடவும் உள்நாட்டு கனடியர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கில் இவ்வாறு சம்பளத்தை அதிகரிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

தற்போதைய லிபரல் அரசாங்கம் கனடிய பிரஜைகளை விடவும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கியதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக தற்காலிக வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் சந்தர்ப்பம் காரணமாக வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் வீட்டு பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் எழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஒன்றாரியோவில் (Ontario) அடிப்படை மணித்தியால சம்பளம் 28.39 டொலர்களாக உள்ள நிலையில் இந்தத் தொகை குறைந்தபட்சம் 34.7 டொலர்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.