நிபந்தனை அடிப்படையில் ஜானிக்கு ஜாமீன்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடன இயக்குனராக இருப்பவர் ஜானி. அவர் மீது கடந்த மாதம் பாலியல் குற்றச்சாட்டு பதிவாகி பரபரப்பானது. மைனர் நடனப் பெண் ஒருவரை அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு காரணமாக ‘போக்சோ’ சட்டத்தில் கைதானார்.

கைது செய்யப்பட்ட பின்பு ஜாமின் வழங்கக் கோரி நீதிமன்றத்தை அணுகினார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இன்று அவருக்கு ரங்கா ரெட்டி நீதிமன்றம் ஜாமின் வழஙகியுள்ளது. நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து சன்ச்சலகுடா சிறையில் இருக்கும் அவர் நாளை அக்டோபர் 25ம் தேதி விடுவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

சமீபத்தில் தேசிய விருதைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை அணுகி இடைக்கால ஜாமின் பெற்றார் ஜானி. ஆனால், தேசிய விருது தேர்வு குழு அவருடைய தேசிய விருதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. அதனால், டெல்லி சென்று அவரால் அந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.

தற்போது வழங்கப்பட்டுள்ள ஜாமின் என்பது ‘நிபந்தனை ஜாமின்’. அவரோ, அவருடைய குடும்பத்தினரோ புகார் அளித்தவரை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக் கூடாது என்ற நிபந்தனையுடன்தான் ‘நிபந்தனை ஜாமின்’ வழங்கப்பட்டுள்ளது.