எல்லை தாண்டி வந்த தமிழக மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி வந்த தமிழக மீனவர்கள் 12 பேரை அவர்களின் விசைப்படகுகளுடன் துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நள்ளிரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே 40 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்கள் 12 பேரையும், விசைப்படகையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிலம்புச் செல்வன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சனிக்கிழமை (26) குனா, செஞ்சிவேல், வெங்கடேசன், சின்னஅப்பு, கார்த்தி, ரகு உள்ளிட்ட 12 மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 12 பேரும் விசாரணைக்காக மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் படகுடன் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தொடர்ந்து மாலையில் பருத்தித்துறை நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர் படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்படி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.