தமிழ் சினிமாவைக் குறை கூறும் தெலுங்கு நடிகர்

தெலுங்குத் திரையுலகத்தில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கிரண் அப்பாவரம். இன்னும் பத்து படங்களில் கூட நடித்து முடிக்கவில்லை. ஆனால், அதற்குள் தமிழ் சினிமா உலகத்தைப் பற்றி குறை கூறி பேச ஆரம்பித்துவிட்டார்.

அவர் நாயகனாக நடித்துள்ள ‘கா’ என்ற திரைப்படம் இந்த வாரம் தீபாவளிக்கு தெலுங்கில் வெளியாகிறது. அந்தப் படத்தைத் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட நினைத்தார்கள். ஆனால், தமிழில் மூன்று நேரடிப் படங்கள் வெளியாகிறது. அது மட்டுமல்ல தெலுங்கிலிருந்து டப்பிங் ஆகி வரும் ‘லக்கி பாஸ்கர்’ படமும் வெளியாகிறது. நேரடித் தமிழ்ப் படங்களுக்கே தியேட்டர்கள் சரியாகக் கிடைக்காத நிலைதான் உள்ளது.

இதனிடையே, ‘கா’ படத்தை தமிழகத்தில் வெளியிட முடியவில்லை என தமிழ் சினிமா உலகை குறை கூறி பேசியிருக்கிறார் கிரண் அப்பாவரம். தமிழ்ப் படங்களுக்கு தெலுங்குத் திரையுலகத்தில் தியேட்டர்கள் தருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் தெலுங்குப் படங்களுக்குத் தியேட்டர்கள் தரவில்லை என்று பேசியிருக்கிறார் கிரண். கேரளாவில் வெளியிட முடியாதது பற்றி அவர் குறை கூறி பேசவில்லை. ‘லக்கி பாஸ்கர்’ படத்துடன் கேரளாவில் போட்டி போட மாட்டார்களாம். ஏனென்றால் துல்கரின் சினிமா நிறுவனம் ‘கா’ படத்தை வெளியிட்டுத் தருகிறோம் என சொல்லி உள்ளார்களாம். துல்கரின் ‘லக்கி பாஸ்கர்’ படம் தெலுங்குப் படமென்றாலும் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க தியேட்டர்களில் வெளியாகிறது.

இந்த வாரம் தெலுங்கில் மட்டும் வெளியிட்டுவிட்டு அடுத்த வாரம் மற்ற மொழிகளில் வெளியிட உள்ளதாக தற்போது அறிவித்துள்ளார்கள்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படம் தெலுங்கில் டப்பிங் ஆகி அங்கு நிறைய தியேட்டர்களில் வெளியாவது அங்குள்ள வளரும் நடிகர்களை பொறாமைப்பட வைத்துள்ளது என்று தமிழ் ரசிகர்கள் கூறுகிறார்கள்.