சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதி, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் , முன்னாள் யாழ் மாவட்ட உறுப்பினர் என்ற தகைமைகளுக்கு அப்பால், அண்ணன் மாவை, ஒரு தமிழ்த் தேசிய அடையாளம் என்பது நிதர்சனம் எனத் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவு தொடர்பில் மனோ கணேசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மிக நீண்ட காலமாக தமிழர் ஜனநாயக பாதையில் பயணித்த, மாவை சேனாதிராஜா என்ற தமிழ் தேசிய வாகனம் நின்று விட்ட சம்பவம் இன்று நிகழ்ந்தே விட்டது.
பல உணர்வு மிக்க தரிப்பிடங்களையும், கடவைகளையும், தமிழ் தேசிய அரசியல் தலைவர்களுடன் நான் கடந்து வந்துள்ளேன். இதிலேயே அண்ணன் மாவையுடன் மிக நீண்ட காலமாக நான் பயணித்தும் உள்ளேன்.
இன்றைய இந்த சோகத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம் பங்கு கொள்கிறோம். எங்கள் அனுதாபங்களை அவரை இழந்து வாடும் அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கும், அவரது கட்சிக்கும், மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் குறித்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.