கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை ஒருவர் பலி!

குருணாகல் பிரதேசத்தில் பொல்லால் மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் – மாவத்தகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேஉட பிரதேசத்தில் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 45 வயதுடைய தந்தை ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொலை செய்யப்பட்ட தந்தையின் வீட்டிற்கு அருகில் சென்ற கும்பல் ஒன்று முதியவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனை அவதானித்த தந்தையும் மகனும் குறித்த முதியவரை காப்பாற்றுவதற்கு முயன்ற போது கும்பல் தந்தையை பொல்லால் மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

காயமடைந்த தந்தை மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த மாவத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.