கொழும்பு மாவட்டத்தில் யானை சினத்தில் களமிறங்கும் ஐக்கிய தேசிய கட்சி

கொழும்பு மாவட்டத்தில் சகல உள்ளுராட்சிமன்றங்களிலும் ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளது. சில மாவட்டங்களில் வேறு கட்சிகளுடன் இணைந்து பொது சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை (17) கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு மாவட்டத்தில் சகல உள்ளுராட்சிமன்றங்களிலும் ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளது. பலமான குழுக்கள் தேர்தலில் களமிறக்கப்படவுள்ளன. முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் போட்டியிடுவதோடு, புதுமுகங்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.

சில மாவட்டங்களில் வேறு கட்சிகளுடன் இணைந்து வேறு சின்னங்களில் போட்டியிடவுள்ளோம். எனினும் ஐக்கிய மக்கள் சக்தி உத்தியோகபூர்வமாக எம்முடன் இணையவில்லை. எம்முடன் இணையும் கட்சிகள் மாவட்டத்துக்கு மாவட்டம் மாறுகின்றது.

எனினும் சில தொகுதிகளில் பொது சின்னத்தில் சில வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். ஏனைய மாவட்டங்களில் பொதுஜன பெரமுன தவிர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்றவற்றுடன் இணைந்து போட்டியிடவுள்ளோம். கொழும்பு மாநகர மேயர் வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம்.

நகரசபைகள் கலைக்கப்பட்ட போதிலும், ஐ.தே.க. உறுப்பினர்கள் மக்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றியிருக்கின்றனர். எனவே மக்கள் மத்தியில் அவர்களுக்கு சிறந்த வரவேற்பிருக்கிறது. அது எமக்கு பாரிய பலமாகும் என்றார்.