வட மாகாணத்திலுள்ள அரச காணிகளில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், காணி ஆணையாளர் நாயகம் சந்தனவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநரின் அழைப்பின்பேரில் வருகை தந்துள்ள காணி ஆணையாளர் நாயகம் மற்றும் அவரது குழுவினர் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக நடமாடும் சேவையை முன்னெடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து மாகாண மட்டத்திலான பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் கிளிநொச்சியிலுள்ள வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்தில் வடக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்புடன் இன்று (21.03.2025) நடைபெற்றது.
இதில் கருத்துத் தெரிவித்த வட மாகாண காணி ஆணையாளர் சோதிநாதன், கடந்த இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட நடமாடும் சேவையின்போது பிரச்சினைக்குரிய காணிகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
அரச காணிகளை குத்தகைக்கு வழங்குவதன் ஊடாக 500 மில்லியன் ரூபா வருமானத்தை இந்த ஆண்டு பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோம். மேலும், வடக்கு மாகாணத்தில் 18,273 பேர் காணிகள் இல்லாமல் உள்ளனர்.
இதனைவிட, வெளிப்படுத்தல் உறுதி மூலமாக சட்டவிரோதமாக காணிகளை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளும், குளங்களின் நீரேந்துப் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளும் வடக்கில் நடைபெறுகின்றன என்று குறிப்பிட்டார்.
இதன் பின்னர் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், மக்கள் காணிப் பிரச்சினைக்காக பிரதேச செயலகங்களுக்கும், மாவட்டச் செயலகத்துக்கும் பல தடவைகள் அலைந்து திரிவதாகக் குறிப்பிட்டார். இவ்வாறான நடமாடும் சேவைகள் குறிக்கப்பட்ட காலத்துக்கு ஒரு தடவை நடைபெறுவது சிறப்பானது என்றும் சுட்டிக்காட்டினார்.