வெளிநாடு செல்ல முயன்ற நபர்கள் விமான நிலையத்தில் கைது

ஐரோப்பாவிற்கு தப்பி செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த 10 பங்களாதேஷ் பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க, அடியம்பலம பகுதியில் தங்கியிருந்தபோது இந்தக் குழு நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் நாட்டவர்கள் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

சுற்றுலா விசா
அவர்கள் பங்களாதேஷில் இருந்து இந்தியாவிற்கு வந்து, கடந்த பெப்ரவரி மாதம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து, சுற்றுலா விசாக்களைப் பெற்று, நாட்டிலேயே தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நேரத்தில், பங்களாதேஷ் நாட்டினர் நாட்டில் தங்குவதற்கான விசாக்களை மீறி தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

நாடு கடத்தல்
இந்தக் குழு இலங்கையில் இருந்து டுபாய்க்கு சென்று, அங்கிருந்து எகிப்துக்குள் நுழைந்து, பின்னர் மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவிற்குள் நுழைய திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகளை அவர்களது நாட்டிற்கு நாடு கடத்தும் வரை வெலிசறை தடுப்பு மையத்தில் தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.