தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து (Colombo) 5 இலட்சம் பேர் வெளியேறியுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, கடந்த 9 ஆம் திகதி முதல், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் சுமார் 500,000 பயணிகள் கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புத்தாண்டை முன்னிட்டு பிரயாணங்களை மேற்கொள்ளும் மக்களுக்காக நேற்று (13) மேலதிகமாக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
எனினும் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்துள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பணிபுரியும் பெரும்பாலான மக்கள் கடந்த சில நாட்களாக தங்கள் சொந்த இடங்களுக்கு சென்றுள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், கொழும்பிலிருந்து செல்லும் பயணிகளுக்காக இன்றும் (14) மேலதிகமாக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாட்டு மற்றும் சேவை மேற்பார்வைப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.