கன்னட திரைப்பட படப்பிடிப்பில் விபரீதம்: ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதித்த சண்டை நடிகர்கள் 2 பேர்

பெங்களூரு அருகே கன்னட திரைப்பட படப்பிடிப்பின் போது ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதித்த 2 நடிகர்கள், நீரில் மூழ்கி பலியாயினர்.

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் மாகடி அருகே திப்ப கொண்டனஹள்ளி ஏரி உள்ளது. பெங்களூருவில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள இந்த ஏரியில் நேற்று காலை கன்னட நடிகர் துனியா விஜய் நடிக்கும் ‘மஸ்திகுடி’ திரைப்படத்தின் படப் பிடிப்பு நடைபெற்ற‌து. ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் துனியா விஜய் நடித்த காட்சிகளை இயக்கு நர் நாகசேகர் ப‌டமாக்கினார்.

இதைத் தொடர்ந்து துனியா விஜய், வில்லன் நடிகர்கள் அனில், உதய் ஆகியோருடன் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது மூவரும் சுமார் 100 அடி உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதித்து நீச்சல் அடித்து கரை சேர்வது போன்ற காட்சிகளை படமாக்க நாகசேகர் முடிவு செய்தார்.

எனவே, பிற்பகல் 3 மணி அளவில் துனியா விஜய், அனில், உதய் ஆகிய மூவரும் ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதித்தனர். அடுத்த சில நிமிடங்களில் துனியா விஜய் மட்டும் நீரில் நீந்தி கரையை அடைந்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் அனில், உதய் ஆகிய இருவரும் கரைக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த படக் குழுவினர் மற்றும் சண்டை கலைஞர்கள் உடனடியாக நீரில் குதித்து இருவரையும் தேடினர்