வவுனியாவில் நியாய விலைக்கு விற்கப்படும் அரிசியை, யாழ்.வியாபரிகளே அதிக சிலைக்கு விற்கின்றனர் எனவும் யாழில் அரிசி விலை அதிகரிப்பிற்கு தாம் பொறுப்பல்ல எனவும் வவுனியா அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியாவில் உள்ள அரிசி ஆலைகளில் கொள்வனவு செய்யப்படும் அரிசியில், கிலோ ஒன்றுக்கு 15 தொடக்கம் 20 ரூபாய் வரை இலாபம் வைத்தே விற்பனை செய்யப்படுவதாக வவுனியா அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அரிசி கொண்டு செல்லப்படுகின்ற போது கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் 50 சதம் போக்குவரத்து செலவு ஏற்படுகிறது. அதன் பின் விற்கப்படுகின்ற அதிகரித்த விலையானது மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கான இலாபமாகவே அமைந்துள்ளது.
அந்தவகையில் வவுனியாவில் சிவப்பு அரிசி ஒரு கிலோ 82 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட யாழ்ப்பாணத்தில் அது 90 ரூபாய் தொடக்கம் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சம்பா வவுனியாவில் 78 ரூபாய்க்கும் யாழில் 90 ரூபாய்க்கும், சிவப்பு பச்சை வவுனியாவில் 70 ரூபாய்க்கும் யாழில் 85 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், யாழில் தற்போது அதிகரித்து காணப்படும் அரிசி விலையேற்றம் வவுனியா அரிசி ஆலை வியாபாரிகளால் ஏற்பட்டது அல்ல எனவும் தாம் விற்பனை செய்யும் அரிசியை மொத்த வியாபாரிகளிடம் கொள்வனவு செய்யும் யாழ்.சில்லறை வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட முயல்வதே அதற்குக் காரணம் எனவும் வவுனியா அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் வவுனியாவில் அரிசி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறியே யாழ். வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக வவுனியா அரிசி ஆலை உரிமையாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.