வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு கருத்தரங்கு

வரவு செலவுத் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு கருத்தரங்கு நடத்தப்பட உள்ளது.

அரசாங்கத்தின் 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை அமுல்படுத்தும் போது அரச பணியாளர்களின் பங்களிப்பு குறித்து தெளிவுபடுத்தப்பட உள்ளது.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையில் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் இன்று மாலை 5.00 முதல் 7.30 மணி வரையில் இந்த கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் எம்.ஐ.எம். ரபீக், சுங்கப் பணிப்பாளர் நாயகம் சூளானந்த பெரேரா, வரவு செலவுத்திட்ட பணிப்பாளர் நாயகம் கே.டி.எஸ் ருவான்சந்திர ஆகியோரும் இந்த கருத்தரங்கில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வரவு செலவுத்திட்ட யோசனைகளை எவ்வாறு அரச அதிகாரிகள் அமுல்படுத்த வேண்டும் என்பது பற்றி இந்த கருத்தரங்கில் விளக்கம் அளிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.