விஷாலால் வந்த வினை! சிவகார்த்திகேயன் வேதனை!

சிவகார்த்திகேயன் மூன்று தயாரிப்பாளர்களுக்கு படம் பண்ணுகிற விஷயத்தில் ஏற்பட்ட பிரச்சனை தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து கூடியது. வளர்கிற நேரத்தில் எல்லாரையும் அணுசரித்துப் போகணும். அதே நேரத்தில் அவர்களும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் நினைத்தது சிவகார்த்திகேயன் மனசு. உண்மையில் இதில் ஒரு தயாரிப்பாளர், வெறும் பத்து லட்சம் மட்டும்தான் சிவாவுக்கு அட்வான்சாக கொடுத்தாராம் அப்போது. அதுவும் ஒரு கோடி சம்பளம் பேசி. இப்போது சிவகார்த்திகேயனின் பிசினசே 60 கோடியை நெருங்கி நிற்கிறது. எப்படி பழைய பஞ்சாங்கம் செல்லும்?

நடிகர்களுக்கு ஒன்று என்றால், நடிகர் சங்கமும் வருமல்லவா? ஏற்கனவே மீடியாக்களுக்கு பேட்டியளித்த விஷால், “சிவகார்த்திகேயன் பிரச்சனையில் நடிகர் சங்கம் தலையிட்டு அவருக்கு துணை நிற்கும்” என்றார். ஐயா… எசமான்… இதுதான் அந்த உதவிங்களா? என்று சிவா வட்டாரம் ஜர்க் ஆகிற அளவுக்கு கொண்டு வந்து விட்டுவிட்டாராம் விஷால். என்ன நடந்தது?

பஞ்சாயத்தில் விஷால் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசுகிறேன் பேர்வழி என்று பஞ்சாயத்தார்களையும், சில தயாரிப்பாளர்களையும் ஒருமையில் பேசிவிட்டாராம். அதில் ஆத்திரமடைந்த சங்கம், தங்கள் கோபத்தை சிவகார்த்திகேயனிடம் காட்டிவிட்டது. விஷால் வராமலிருந்திருந்தால், இந்தப் பிரச்சனை இன்னும் சுமூகமா முடிஞ்சுருக்குமோ என்கிற அளவுக்கு யோசித்தார்களாம்.