‘குடும்பத்தை இழிவுப்படுத்தி விட்டார்’ நடிகை ஊர்வசி மீது மேலும் ஒரு பெண் புகார்

கேரளாவில் உள்ள தனியார் மலையாள டெலிவி‌ஷன் நிறுவனம் ஒன்று குடும்ப பிரச்சினைகளை விவாதித்து தீர்வு காணும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது.

இந்நிகழ்ச்சியை பிரபல நடிகை ஊர்வசி தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் இது தொடர்பாக வெளியான நிகழ்ச்சியில் நடிகை ஊர்வசி ஆண்களை அவமரியாதையாக பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், கேரள மனித உரிமை கமி‌ஷனிடம் புகார் செய்யப்பட்டது.

கமி‌ஷனின் பொறுப்பு தலைவர் மோகன்தாஸ் இது தொடர்பாக விளக்கம் கேட்டு தனியார் டெலிவி‌ஷன் நிறுவனத்திற்கும், நடிகை ஊர்வசிக்கும் நோட்டீசு அனுப்பினார்.இந்த நிலையில் கணவனை பிரிந்து வாழும் பெண் ஒருவர் கேரள மனித உரிமை கமி‌ஷனிடம் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார்.

புகார் மனுவில் தனியார் டெலிவி‌ஷன் நிறுவனம் தனது குடும்பத்தை இழிவுப்படுத்தி விட்டதாகவும், தனது தனிப்பட்ட வாழ்க்கையை விளம்பரப்படுத்தி மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டதாகவும் இதற்கு காரணமான டெலிவி‌ஷன் நிறுவனம் மற்றும் நிகழ்ச்சியை வழங்கிய நடிகை ஊர்வசி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறி இருந்தார்.

இது தொடர்பாகவும் கேரள மனித உரிமை கமி‌ஷன் விசாரணை நடத்தி வருகிறது. இது கடந்த 2 நாட்களில் நடிகை ஊர்வசி மீது கூறப்பட்ட 2-வது புகார் என்பது குறிப்பிடத்தக்கது.