ஆளும் கட்சியின் எட்டு அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு: டொப்டென் குழுவிடம் விபரங்கள்!

ஆளும் கட்சியின் எட்டு அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.

ஏற்கனவே ஆளும் கட்சியின் பத்து அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் மேலும் எட்டு அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட உள்ளது.

முறைப்பாடு செய்யப்பட உள்ள எட்டு அமைச்சர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைச்சர்கள் மேற்கொண்ட முறைகேடுகள் பற்றிய விபரங்கள் ஏற்கனவே கூட்டு எதிர்க்கட்சியின் டொப்டென் குழுவிடம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் டொப் டென் திட்டத்திற்கு அமைய ஏற்கனவே கடந்த ஒக்டோபர் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார பிரதமருக்கு எதிராகவும் கடந்த 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பத்திரன நிதி அமைச்சருக்கு எதிராகவும் முறைப்பாடு செய்திருந்தனர்.

எஞ்சிய எட்டு அமைச்சர்களுக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.