தண்டப்பணமாக 2500 ரூபா அதிகரிப்பா? நிதியமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை

வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக 2500 ரூபா அபராதம் விதிப்பது தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும், போக்குவரத்து சங்கங்களுக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

போக்குவரத்து சேவைகளுடன் தொடர்புடைய சங்கங்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளன.

நிதி அமைச்சில் இன்று மாலை இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனியார் பஸ் உரிமையாளர் சங்கம், பாடசாலை மாணவ மாணவியர் போக்குவரத்து சங்கங்கள், முச்சக்கர வண்டி சங்கங்கள் உள்ளிட்டன இந்த சந்திப்பில் பங்கேற்க உள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வீதிப் போக்குவரத்து விதி மீறல்களுக்கான குறைந்தபட்ச அபராதத் தொகை 2500 ரூபாவாக உயர்த்தப்பட்டமையை எதிர்த்து இன்று நள்ளிரவு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அகில இலங்கை பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.