எனக்கு அழைப்பிதழ் இல்லை… ஆனால் ரஜினி சாரைக் காண வந்தேன்! – சல்மான் கான்

மும்பையில் நடந்த 2.0 படத்தின் முதல் தோற்ற வெளியீட்டு விழாவுக்கு அழைப்பு இல்லாவிட்டாலும் ஆஜரானார் சல்மான்கான்.

யாரும் அழைக்காமலே இந்த விழாவுக்கு வரக் காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே என்றார் சல்மான்.

யாஷ்ராஜ் பிலிம்ஸ் ஸ்டுடியோவில் நடந்த இந்த விழாவில் கலந்து கொள்ள சல்மான்கானுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. ஆனாலும் அவர் விழா நடக்கும்போது வந்துவிட்டார். பார்வையாளர் பகுதியில் அமர்ந்து 2.0 ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டை கண்டு ரசித்தார்.

பின்னர்தான் அவர் வந்திருப்பது தெரிந்து மேடைக்கு அழைத்தனர். மைக்கைப் பிடித்த சல்மான்கான், “இந்த விழாவுக்கு என்னை யாரும் அழைக்கவில்லை. ஆனால் விழா நடப்பது தெரியும். ரஜினி சார் வந்திருப்பது தெரியும். அவரைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே நான் வந்தேன். ரஜினி சார் மீது நான் அளவுகடந்த மரியாதை வைத்துள்ளேன். அதற்காகவே நான் வந்தேன்.

இந்த டீசர், ஃபர்ஸ்ட் லுக் பார்த்தேன். பிரமாதம். அக்ஷய் ஒவ்வொரு நாளும் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்கிறார். நாங்கள் அப்படியே தேங்கி நிற்கிறோம்,” என்றார்.