2017 மகிழ்ச்சியான ஆண்டாக அமையும்: விமல் நம்பிக்கை

விமல் நடிப்பில் இந்த வருடம் ‘அஞ்சல’, ‘மாப்ள சிங்கம்’ என இரண்டு படங்களே வெளிவந்திருக்கின்றன. இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும், இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ரெண்டாவது படம்’ முடிவடைந்தும் இன்னும் ரிலீசாகாமல் உள்ளது.

இதையடுத்து பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்து வரும் ‘மன்னர் வகையறா’ படம் நிறைவடையும் நிலையில் இருக்கிறது. இந்நிலையில், தனக்கு அடுத்த வருடம் மகிழ்ச்சி தரக்கூடிய ஆண்டாக அமையும் என்று விமல் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது,

என்னுடைய நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அடுத்து சுசீந்திரன் தயாரிப்பில் அவரது உதவியாளர் சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். இந்த படத்துக்கு இமான் இசை அமைக்கிறார். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். பாண்டிராஜ் வசனம் எழுதுகிறார்.

இதையடுத்து, ‘ராஜதந்திரம்’ இயக்குனர் அமீத் படத்திலும் நடிக்க இருக்கிறேன். இத்துடன் இன்னும் நான்கு முக்கிய படங்களில் நடிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. 2017 ம் ஆண்டு மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும். எனக்கு புதுத் தெம்பை தருவதாக இருக்கும் என்றார்.