தென்னிந்திய நடிகர் ஒருவர் தன்னுடைய கையில் பன்றிக்குட்டியுடன் வங்கி ஒன்றுக்கு முன்னால் வரிசையில் நின்றிருக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டதை தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தன்னுடைய அடுத்த திரைப்படமான `அதிகோ`வில் இந்த பன்றிக்குட்டி நடிப்பதாக ரவி பாபு தெரிவித்துள்ளார். தெலுங்கில் `அதிகோ` என்றால் அங்கே என்று அர்த்தம்.

இந்தியாவில் ஊழல் மீதான கடும் நடவடிக்கை காரணமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து, வங்கிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்பது வழக்கமாகிவிட்டது.

´´இந்த பன்றிக்குட்டியை ஒரு கணினி வரைகலை கூடத்திற்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோது, எரிபொருள் நிரப்ப பணம் இல்லை என்பதை நான் உணர்ந்தேன்´´ என்று தெரிவித்துள்ளார் பாபு.

சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் பரவலாக பரவி வருகிறது. இந்த பன்றிக்குட்டியின் பெயர் புன்ட்டி, ரவி பாபுவின் திரைப்படத்தில் நடிக்கும் 25 பன்றிகளில் இதுவும் ஒன்று.

´´இவைகள் வேகமாக வளரக்கூடியவை. அதனால், பன்றிக்குட்டியின் கதாபாத்திரம் அதே அளவு தெரியவேண்டும் என்பதற்காக சில பன்றிக்குட்டிகளை நானே வளர்த்து வருகிறேன்´´ என்று தெரிவித்துள்ளார் ரவி பாபு.