சென்னையில் கமிஷனர் அலுவலகத்தில் கழுத்து அறுபட்டு ரத்தம் சொட்டிக் கொண்டிருந்த நிலையில் வாலிபரும், அவரது தாயாரும் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை பெரியமேடு பகுதி நேவல் மருத்துவமனை சாலையைச் சேர்ந்தவர் பரத்(22). இவர் நேற்று மாலை கழுத்து அறுபட்டு ரத்தக் காயத்துடன் கமிஷனர் அலுவலகம் முன்பு தனது தாயாருடன் ஒரு கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அந்த கோரிக்கையில் சரஸ்வதி கூறியதாவது, எனது மகன் பரத் மீது பெரியமேடு பொலிசார் அடிக்கடி பொய் வழக்கு போட்டு காவல்நிலையம் அழைத்துச் செல்கின்றனர்.

இன்றுக் கூட (நேற்று) பெரியமேடு பொலிசார் பரத்தை விசாரணை நடத்த வேண்டும் என அழைத்துச் சென்றனர்.

இதனால் மனமுடைந்த எனது மகன் பரத் பெரியமேடு பொலிஸ் நிலையம் அருகே கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலை செய்ய முயன்றதாக தெரிவித்துள்ளார்.

மேலும் உயர் பொலிஸ் அதிகாரிகள் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரஸ்வதி கோரிக்கை வைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து விளக்கத்தைக் கேட்டறிந்த கமிஷனர் அலுவலக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சரஸ்வதியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், கழுத்து அறுபட்டு காயத்துடன் இருந்த பரத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.