தோழர் பிடல் கஸ்ட்ரோவுக்கு இறுதி மரியாதை

மேற்குலகம் ஆட்டிப் படைத்த கியூபாவை மீட்டெடுத்து தலை நிமிர வைத்த புரட்சிக்காரர் பிடல் கஸ்ட்ரோ தனது 90 வது வயதில் உலகத்துக்கு விடைகொடுத்து கண்களை மூடிக்கொண்டார்.

அமெரிக்க சி. ஐ. ஏ. உளவுப் பிரிவு அவரைக் கொல்வதற்காக 600 தடவைகளுக்கும் மேலாக முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவற்றிலிருந்து தப்பி அமெரிக்காவுக்கு அடிபணியாமல் தனது புரட்சிப் பயணத்தை முன்னெடுத்த தைரியம் மிக்கவனாகவே கஸ்ட்ரோவை உலகம் பார்க்கின்றது.

முதலாளித்துவ, சர்வாதிகார அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்து தனது தாய் நாடான கியூபாவை அதன் பிடியிலிருந்து மீட்டு வெற்றி கண்டவன்.

இறுதி மூச்சு வரை தனது புரட்சிப் பாதையிலிருந்து விலகாது உறுதியாக செயற்பட்டவனாகவே பிடல் கஸ்ட்ரோவை பார்க்க முடிகிறது.

அமெரிக்காவுக்கு அடுத்த வேலியில் உதயமான கஸ்ட்ரோவின் கம்யூனிஸ நாடு இன்றளவும் எவ்வித ஆட்டமும் காணாமல் உறுதியானதாக இயங்கி வருகிறது.

இது கஸ்ட்ரோ எடுத்த உறுதிமிக்க நிலைப்பாட்டின் வெளிப்பாடாகவே நோக்கக் கூடியதாக உள்ளது.

கஸ்ட்ரோ தனது எதிரிகள் மீது தாக்குதலை முன்னெடுக்கும் பொருட்டு அன்றைய சோவியத் ஆட்சியாளர்களுடன் இணைந்து அணு ஆயுதப் போரில் பங்களிப்புச் செய்தவர்.

என்ற போதிலும் கஸ்ட்ரோ தனது எதிரிகளை மரியாதையோடு நோக்கவும் தவறவில்லை.

தான் கொண்ட கொள்கையில் நம்பிக்கையும், உறுதியும் கொண்டதால் லட்சோப லட்சம் மக்கள் அவனை ஒரு மகா வீரனாக பார்த்தனர்.

பிடல் கஸ்ட்ரோவின் எழுச்சி காரணமாக கியூபாவிலும் வேறு சில நாடுகளிலும் இளைஞர்களும், யுவதிகளும் அவனைப் பின்பற்றத் தொடங்கினர்.

உலகின் பல பல்கலைக்கழகங்களின் அரசியல் சங்கங்கள், அமைப்புகள் கூட கஸ்ட்ரோவின் பாதையை பின்பற்றி பயணித்தன.

பிடல் கஸ்ட்ரோவின் தந்தை ஒரு கரும்புத் தோட்ட சொந்தக்காரராவார்.

கஸ்ட்ரோ தந்தையின் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களோடு பழகும் காலத்தில்தான் வறுமையில் வாழும் உழைப்பாளர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற இலட்சியத்தை தனது மனதில் பதிய வைத்துக் கொண்டார்.

தனது புரட்சிப் பாதையில் தன் சகோதரனையும் இணைத்துக் கொண்டார்.

சமூகத்தில் வகுப்பு வாதம் இருக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருந்த பிடல் கஸ்ட்ரோ, வகுப்பு வாதம் ஒரு வேதனை தரக்கூடியதென்பதை உணர்ந்து கரும்புத் தோட்டத்திலிருந்த ஹைட்டி இன தொழிலாளர்களுடன் கைகோர்த்துச் செயற்பட்டார்.

அவர்களது வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும். அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவருள் சுழன்ற வண்ணமிருந்தது.

இந்த எண்ணங்களே கஸ்ட்ரோவை புரட்சிக்காரனாக மாற்றியமைத்தது.

1945ல் ஹாவாட் பல்கலைக்கழகத்தில் சட்ட மாணவராக பயின்று கொண்டிருந்த காலப் பகுதியில் அதன் அரசியல் தொழிற்சங்கத்தின் தலைவராக பதவியேற்று சமூக அநீதி, ஊழல் மோசடிகளுக்கு எதிராக குரல் எழுப்பினார்.

தனது புரட்சிகர எண்ணக் கருவோடு 1952ல் சுயேச்சை வேட்பாளராக கியூபா காங்கிரஸுக்காக களமிறங்கினார்.

ஆனால் அன்றைய பாராளுமன்றம் செல்லும் கனவு நனவாகவில்லை. எனினும் தனது இலட்சியத்தில் அவர் சோர்வடையவில்லை.

ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழந்த கஸ்ட்ரோ ஆயுதப் போராட்டத்துக்குத் தயாரானார்.

இடையில் தனது சகோதரனுடன் இணைந்து சேகுவேராவைச் சந்தித்து ஆயுதப் போராட்டத்தில் குதித்தார்.

இக்கால கட்டத்தில் படிஸ்டா ஆட்சி ஆயுதப் போராட்டக்காரர்களை கொன்று குவித்தனர்.

கஸ்ட்ரோ 15 வருட கால சிறை வாசம் செல்லும் நிலை ஏற்பட்டது. அப்போது கஸ்ட்ரோ சொன்ன வார்த்தை “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்பதாகும்.

கஸ்ட்ரோவின் அந்த வார்த்தை பொய்யாகவில்லை பின்னரான காலப் பகுதியில் கஸ்ட்ரோ பக்கம் லட்சோப லட்சம் மக்கள் அணி திரண்டனர்.

1959 ஜனவரி மாதம் பிடல் கஸ்ட்ரோ ஹவானா நகருக்குள் நுழையும் போது முழு உலகும் அவனை மாவீரனாகப் பார்த்தது.

தனது தாய் மண் கியூபாவை தூய்மைப்படுத்த வேண்டும் என்ற இலட்சியப் பயணத்தில் மக்கள் கைகோர்த்து அவனுக்கு ஊக்கமளித்தனர்.

1959 முதல் 2006 வரை கியூபா மக்களின் பெருந்தலைவராக இருந்து அந்த நாட்டை உலகின் தலைசிறந்த உன்னதமான நாடாக மாற்றியமைத்தார்.

2006 ல் கஸ்ட்ரோ தன் பயணத்திலிருந்து ஓய்வுபெறத் தீர்மானித்தார்.

உடல் நலக் குறைபாடு காரணமாக தனது சகோதரன் ராவுல் கஸ்ட்ரோவிடம் அதிகாரப் பொறுப்பை மக்களாதரவுடன் கையளித்தார்.

எனினும் பிடல் கஸ்ட்ரோ கடந்த நவம்பர் 25ம் திகதி வரையும் கியூபாவின் மக்கள் தலைவனாகவே இருந்து வந்தார்.

கியூபா மக்கள் கஸ்ட்ரோவை கியூபாவின் தந்தையாகவே மதித்தனர்.

கியூபா மக்களுக்கு பிடல் கஸ்ட்ரோ என்ற மனிதன் கிடைக்காதிருந்தால் அந்த நாடு இன்றளவும் சூதாட்ட நாடாகவும் பரத்தையர் கூடமாகவுமே இருந்திருக்க முடியும்.

அமெரிக்கா உட்பட மேற்குலகுக்குத் தலைசாய்க்காத கஸ்ட்ரோ மேற்குலகுக்கு பெரும் சவாலாகவும் மாறி இருந்தார்.

இன்று உலக நாடுகளுக்கு டாக்டர்களையும், சீனியையும் வழங்கும் வளமான நாடாக கியூபாவை மாற்றியமைத்த பெருமை பிடல் கஸ்ட்ரோவையே சாரும்.

பிடல் கஸ்ட்ரோ மறைந்தாலும் அவனது வழிகாட்டல்கள் கியூபாவில் தொடரும் வரை அவனது நாமம் அழியப் போவதில்லை.

உலகளவில் இன்று கம்யூனிஸம் தோல்வி காணும் நிலை ஏற்பட்டுள்ள போதும் கியூபா கஸ்ட்ரோ காட்டிய கம்யூனிஸப் பாதையிலேயே பயணிக்கும்.

அந்த மக்கள் பிடல் கஸ்ட்ரோவை கியூபாவின் கடவுளாக மதிப்பதே இதற்கான காரணமாகும்.

அவனது மறைவை முழு உலகும் இன்று கவலையோடு பார்க்கின்றது.

உலகம் ஒரு சிறந்த மனிதநேயமுள்ள புரட்சித் தலைவனை இழந்துள்ளது.

அவனது புகழ் கியூபாவின் வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றில் கூட பிடல் கஸ்ட்ரோவின் நாமம் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

கியூபா புரட்சியின் மூலம் உலகை மாற்றியமைத்த புரட்சித் தலைவனே நீ மறைந்தாலும் உன் நாமம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை உறுதியாக நம்புகின்றோம்.

உனக்கு எமது வீர வணக்கங்களை சமர்ப்பிக்கின்றோம்.