கடற்படையினரின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஆதரவு!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கடற்படையினரின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஆதரவு அளிக்கின்றது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் பயணம் செய்ய முடியாத வகையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தமை பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், கடற்படையினர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்த வேளை, ஊடகவியலாளர் ஒருவரையும் கடற்படை தளபதி தாக்கியிருந்தார்.

”போரில் வெற்றி பெற்ற எங்களது இராணுவத்தை துன்புறுத்திய இதே அரசாங்கம்,தற்போது கடற்படையினரின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றது” என கோத்தபாய ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இந்த கருத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.