மும்பை டெஸ்ட்: இந்தியா 631 ரன்கள் குவிப்பு; இங்கிலாந்து 111/3

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 400 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்க 451 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 147 ரன்னுடனும், ஜயந்த் யாதவ் 30 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. விராட் கோலியும், ஜயந்த் யாதவும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். ஜயந்த் யாதவ் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். இருவரின் ஆட்டத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 631 ரன்கள் குவித்தது. விராட் கோலி 235 ரன்னும், ஜயந்த் யாதவ் 104 ரன்னும் குவித்தனர்.

அடுத்து 231 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் சதம் அடித்த ஜென்னிங்ஸ் இந்த இன்னிங்சில் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார். இவர் புவனேஸ்வர்குமார் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து குக் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட் களம் இறங்கியது முதலே அதிரடியாக விளையாடினார். குக் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மொயீன் அணி ரன்ஏதும் எடுக்காமல் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார்.

4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். மொயீன் அலி அவுட்டாகும்போது இங்கிலாந்து 49 ரன்கள் எடுத்திருந்தது.

அதிரடியாக விளையாடிய ஜோ ரூட் 75 பந்தில் அரைசதம் அடித்தார். இங்கிலாந்து அணி 29 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஜோ ரூட் 63 ரன்னுடனும், பெர்ஸ்டோவ் 20 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.