மானிட பரிணாம வளர்ச்சியில் மனிதன் பெற்ற சிறப்பு மிக்க வெற்றிகளில் மதம் சார்ந்த விடயம் முன்னிலையில் உள்ளது. மனிதர்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளே அவர்கள் பிறரிடத்தில் தயவு காட்டுவதற்கும் அவர்களது உரிமைகள் தொடர்பில் ஆழமாக சிந்திப்பதற்கும் காரணமாக அமைகிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இவ்வருட நத்தார் பண்டிகையினை முன்னிட்டு இன்று(22) அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில்,
இரண்டாயிரத்து பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் அறியாமை காரணமாக சமூக சீர்கேடுகள் நிறைந்திருந்த காலத்திலேயே குழந்தை இயேசுவின் பிறப்பு நிகழ்ந்தது.
அந்நாளில் ஏழையின் மாட்டுத் தொழுவத்தை மையமாகக் கொண்டு பிரவாகித்த புதிய மத நோக்கின்பால் ஒளிர்ந்த நட்சத்திரங்கள் அன்று போல் இன்றும் மானிட உன்னதத்தின் வழித்தடமாக மிளிர்கின்றன.
உலகில் வாழ்கின்ற கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உலகளாவிய விழாவாகக் கொண்டாடும் நத்தார் பண்டிகையில் பெருங் கருணையின் நாதமே ஓங்கி ஒலிக்கிறது.
அன்று ஆணவம் பிடித்திருந்த ஏரோது மன்னன் போன்ற மன்னர்களை வரலாற்றுக்கே மட்டுப்படுத்தி சக வாழ்வின் செய்தியை உலகிற்குக் கொண்டு வந்த இயேசு கிறிஸ்து பிரானை சதா கால புனிதத் தன்மைக்கு உயர்த்தியது நல்ல விடயங்களை வணக்கத்திற்கு உரியவையாகக் கருதும் உலக மக்களேயாவர்.
அனைவர் மீதும் அன்பைச் செலுத்தும் நத்தார் பண்டிகையின் உண்மையான செய்தியான சமாதானம், மகிழ்ச்சி, கருணை நிறைந்த சிறப்பான நத்தார் இம்முறை அமைய வேண்டும் என அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அனைவருக்கும் சமாதானமும் மகிழ்ச்சியும் நிறைந்த நத்தார் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்தார்.