வாரணாசியில் மோடி வாகனம் மீது துண்டுச்சீட்டு வீசிய வாலிபர்!

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேசத்தில் உள்ள தனது வாரணாசி தொகுதியில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார். அங்கு கபீர்நகர் பகுதிக்கு அவர் வந்தபோது சாலையின் இரு புறங்களிலும் மக்கள் கூடி நின்றனர்.

அப்போது அந்த வழியே பிரதமர் மோடி பயணம் செய்த காரும், பிற வாகனங்களும் கடந்து சென்றன.

அந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர், ஒரு துண்டுச்சீட்டை மோடியின் வாகன அணிவகுப்பின்மீது வீசினார். உடனே உஷாரான போலீசார், அந்த வாலிபரை பிடிக்க பாய்ந்தனர். ஆனால் அவர் நைசாக நழுவி தப்பி விட்டார்.

அவர் தலையில் மப்ளர் அணிந்திருந்ததாக சொல்லப்படுகிறது.

அந்த துண்டுச்சீட்டு, சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அதை வீசிய வாலிபர் தன்னை ‘அபினவ் திரிபாதி, சமூக ஊழியர்’ என்று சுய அறிமுகம் செய்துகொண்டு, பிரதமர் மோடியின் வாரணாசி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை பதிவு செய்வதாக கூறி உள்ளார்.

வாரணாசியில் நடைபெறுகிற பல்வேறு அவலங்களையும் அந்த துண்டுச்சீட்டில் அவர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.