தமிழ் மொழி பெயர்ப்பு இல்லாத காரணத்தினால் எல்லை நிர்ணய அறிக்கையை அமைச்சர் ஏற்கவில்லை!

தமிழ் மொழிபெயர்ப்புடன் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கையை பதில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன ஏற்கவில்லை என சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எல்லை நிர்ணய அறிக்கையை பூர்த்தி செய்து இறுதி அறிக்கை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அதில் தமிழ் மொழி பெயர்ப்பு உள்ளடக்கப்படாத காரணத்தினால் அதனை ஏற்றுக்கொள்ள அமைச்சர் மறுத்துவிட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ் உள்ளிட்ட பிரதிநிதிகள் அமைச்சரவை சந்தித்துள்ளதாகவும் தமிழ் மொழி பெயர்ப்பு இன்றி அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு அதனை வர்த்தமானியில் அறிவிப்பதற்கு முடியாத நிலைமை காணப்படுவதாகவும் முழுமைப்படுத்தி தருமாறு ஆணைக்குழுவிடம் கோரியதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அறிக்கை முழுமையாக்கப்பட்ட போதிலும் வட மாகாணம் குறித்த தமிழ் மொழி பெயர்ப்பும் வடமேல் மாகாணத்தின் சில பகுதிகள் குறித்த மொழி பெயர்ப்பும் எஞ்சியிருந்த காரணத்தினால் அறிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.