விடுதலைப் புலிகள் காலத்தில் வடக்கில் இருந்த அர்ப்பணிப்பு தற்போது இல்லை..!

தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் வடக்கு மாகாணத்தில் பணியாற்றிய வைத்தியர்களும் சுகாதார ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.

அதற்கு மக்களிடமிருந்தும் வலுவான ஆதரவு கிடைக்கப்பெற்றதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். எனினும், தற்போது அவ்வாறான சூழல் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம், தேவிபுரப் பிரதேசத்தில் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வடக்கின் சுகாதார தேவையானது ஏனைய மாகாணங்களை விட அதிகமானது.

அவற்றை நிவர்த்திசெய்வதற்கு ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது. அத்துடன், மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லையெனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களும், முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களும் அதிகமாக வடக்கில் வாழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அவர்களின் நலன் கருதி பாரிய சுகாதார வேலைத்திட்டங்களை உருவாக்கவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.