நீதிமன்றின் தடை உத்தரவு! சமலுடன் ஹம்பாந்தோட்டை செல்லும் ரணில்!

நீதிமன்றத்தினால் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ள போதிலும், ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்குவதற்கு எதிராக முன்னர் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டம் திட்டமிட்டப்படி மேற்கொள்ளப்படும் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

நேற்றில் இருந்து 14 நாட்களுக்கு ஆரப்பாட்டம் நடத்துவதற்கு நீதிமன்றினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ள 26 நபர்களின் பெயர்களும் இந்த தடை உத்தரவில் உள்ளடக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்சவின் பெயர்களும் அதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் இரவு ஹம்பாந்தோட்டை மாவட்ட பௌத்த மத குருமார்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பிற்காக பிரதமர் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்சவுடன் சென்றமை குறிப்பிடத்தக்க முக்கிய விடயமாகும்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் சீன நிறுவனத்துடன் கைச்சாத்திடும் ஒப்பந்தத்திற்கமைய ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பல காணிகளை சீனாவுக்கு வழங்குவதனை ஏற்றுக் கொள்ள முடியாதென மகா சங்கத்தின் தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

15 ஆயிரம் ஏக்கர் காணி வழங்கப்படவில்லை எனவும், 1235 ஏக்கர் காணியே ஆரம்பத்தில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலதிக காணிகளை ஹம்பாந்தோட்டையில் பெற்றுக் கொள்ள முடியாதென்றால் மாத்தறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அந்த காணி அளவு பெற்றுக் கொள்வதாகவும், அதன் பெறுமதியை அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் நாடாமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்சவுக்கு ஒப்படைப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.