பாரம்பரியத்தை மீறும் பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை!!

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சென்று சாமி தரிசனம் செய்ய தடை உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மராட்டியத்தில் செயல்பட்டு வரும் திருப்தி தேசாய் தலைமையிலான பூமாதா சமூக அமைப்பு அனைத்து வயது பெண்கள் 100 பேருடன் சபரிமலை கோவிலுக்குள் நுழைவோம் என்று அறிவித்து உள்ளது.

இதுபற்றி சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரேயார் கோபால கிருஷ்ணனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் நுழைய அனுமதி கிடையாது. கோவிலில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் இந்த நடைமுறையை மீற யாரையும் அனுமதிக்க மாட்டோம்.

திருப்தி தேசாய் குழுவினர் கோவிலுக்குள் நுழைய விட மாட்டோம் என்று கேரள தேவசம் மந்திரி கடக்கம்பள்ளி சுரேந்திரன் உறுதிபட கூறி இருப்பதை முழுமனதாக வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.