தீபா அரசியலில் களம் இறங்குவது எப்போது?: ஆதரவாளர்களுடன் ஆலோசனை

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அரசியலில் குதிக்க உள்ளார். இதையடுத்து சென்னை தியாகராயர்நகர் சிவஞானம் தெருவில் உள்ள அவருடைய வீட்டிற்கு தினமும் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒரு பகுதியினர் வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நேற்றும் தொண்டர்கள் வந்திருந்தனர். ஆனால் பகல் வேளையில் தீபா வீட்டில் இல்லை. அவருடைய கணவர் மாதவன் மட்டும் இருந்தார். இதையடுத்து தொண்டர்கள் அவரை சந்தித்து, தீபாவுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து சென்றனர்.

இதற்கிடையே நேற்று மாலை தீபா வீட்டில் இருந்தார். அப்போது அவரை பார்ப்பதற்காக வந்தவர்கள் அவரிடம், ‘ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்து சென்றனர்.

தீபா வீட்டுக்கு ஆதரவு தெரிவிக்க வருபவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்குவதற்காக அவர்களுடைய பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அவர்களுக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, தீபா ஆகியோர் படத்துடன் உறுப்பினர் அட்டை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர். பிறந்தநாளான ஜனவரி 17-ந்தேதி அரசியல் களத்தில் இறங்கலாமா? அல்லது ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி இறங்கலாமா? என்பது குறித்து தீபா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும், சென்னையில் ஜெ.தீபா பேரவை அலுவலகம் திறக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.