பெண்களுக்கு மரியாதை அளிக்க மகன்களுக்கு கற்றுக் கொடுங்கள்: பெற்றோருக்கு ஷாருக்கான் வேண்டுகோள்!

வெளி இடங்களில் பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்க கற்றுக்கொடுத்து மகன்களை வளர்க்குமாறு நாட்டிலுள்ள பெற்றோருக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூர், டெல்லி மற்றும் நாட்டின் பல பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சில வாலிபர்கள் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர்களிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், ஆபாச சைகைகள் காட்டியதாகவும் செய்திகள் வெளியாகின.

இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, சர்வதேச அளவில் அவப்பெயரையும், இந்தியப் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான பட்டிமன்றத்துக்கு வித்திட்டுள்ளது.

இந்நிலையில், மும்பையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடம், இச்சம்பவம் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், ‘இதுபோன்ற செயல்பாடுகள் முற்றிலும் தவறானது. என்னைப் பொருத்தவரையில் எல்லாப் பெண்களும் மரியாதைக்குரியவர்கள் தான். பெண்களுக்கு உரிய மரியாதையை அளித்து அவர்களிடம் எப்படி பழக வேண்டும்? என்பதை தங்கள் மகன்களுக்கு ஒவ்வொரு தாயும், தந்தையும் சிறுவயதில் இருந்தே கற்றுத்தந்து வளர்க்க வேண்டும்’ என்று கூறினார்.

‘பெண்கள் எப்போதுமே என் இதயத்துக்கு மிக நெருக்கமாக இருந்து வந்துள்ளார்கள். எனது மகள், எனது தாயார் மற்றும் நான் சந்தித்த எல்லாப் பெண்களுமே என் இதயத்துக்கு மிக நெருக்கமாக இருந்து வந்துள்ளார்கள்.

பெண்கள் இல்லாவிட்டால், நாம் இங்கிருக்க முடியாது. இல்லத்தரசிகள், பணிக்கு செல்லும் பெண்கள் உள்பட உலகில் வாழும் எல்லா பெண்களுக்கும் உரிய மதிப்பும், மரியாதையும் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

இந்த பூமியில் மிக மரியாதைக்குரியவர்களாக பெண்களை மதிக்கப்படுவதை நாம் உறுதிப்படுத்தி தீரவேண்டியதற்கான காலம் வெகு சமீபத்தில் நெருங்கி விட்டதாகவே நான் நினைக்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.

இந்த  மோசமான சம்பவத்திற்கு ஏற்கனவே பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் பல்வேறு நடிகர்- நடிகையர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.