அமெரிக்காவுக்கு வாருங்கள்: பிரதமர் மோடிக்கு டிரம்ப் அழைப்பு!

அமெரிக்க அதிபராக கடந்த 20-ம் தேதி பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி ஹாட்லைன் மூலம் உரையாடினார். அப்போது, உலகில் உள்ள சவால்களை எதிர்கொள்வதில் அமெரிக்காவின் உண்மையான நட்பு நாடாக இந்தியா இருந்து வந்துள்ளதை டொனால்ட் டிரம்ப் சுட்டிக் காட்டினார்.

இருநாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விரிவான ஆலோசனை நடத்திய இருநாட்டு தலைவர்களும் உலகளாவிய அளவில் தீவிரவாதத்தை எதிர்க்கும் போரில் தொடர்ந்து ஒன்றிணைந்து செயலாற்றுவது என உறுதி ஏற்றுள்ளனர்.

அமெரிக்கா-இந்தியா இடையிலான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்பான கூட்டு செயல்பாடுகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என தனது பேச்சுக்கு இடையில் சுட்டிக் காட்டிய டொனால்ட் டிரம்ப், அரசு விருந்தினராக தங்கள் நாட்டுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக செய்திகள் வெளியானபோது, அவருக்கு முதன்முதலில் பாராட்டு தெரிவித்த முதல் ஐந்து நாட்டு தலைவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.