பதவி உயர்வு தரும் பூவரசன்குப்பம் நரசிம்மர்!!

தீயசக்திகளை அழிக்க கடவுள் அவதாரம் எடுப்பதை புராணங்களில் படித்து இருப்பீர்கள். ஒரு கடவுள் எந்த நோக்கத்துக்காக அவதாரம் எடுக்கிறாரோ, அந்த நோக்கம் முடிந்ததும், அந்த அவதாரமும் நிறைவு பெற்றுவிடும்.

மகாவிஷ்ணு ராம அவதாரம் எடுத்தார். ராவணனை அழித்ததும் அவர் அவதாரம் முடிந்து போனது.

அதுபோல தான் கிருஷ்ண அவதாரமும். கம்சனை வதம் செய்த பிறகு அந்த அவதாரம் முடிவுக்கு வந்துவிட்டது.

ஆனால் நரசிம்ம அவதாரம் இவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. நொடியில் தோன்றி தன் பக்தன் பிரகலாதனுக்காகக் காட்சி கொடுத்த இணையற்ற சிறப்பு அந்த அவதாரத்துக்கு உண்டு.

இரண்யனை வதம் செய்து அழித்த பிறகு நரசிம்மர் உடனே தன் அவதாரத்தை முடித்துக் கொள்ளவில்லை.

அதற்கு பதில் தன் பக்தன் பிரகலாதன் சீரும், சிறப்புமாக வாழ எல்லாவித ஏற்பாடுகளையும் செய்தார். ராஜநீதிக்கான சாஸ்திரங்களை அவர் பிரகலாதனுக்கு சொல்லிக் கொடுத்தார்.

ஒரு நாட்டை ஆள்வதற்கு ஏற்ப பிரகலாதனை தயார்படுத்தினார். எல்லா வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார்.

அதுமட்டுமின்றி பிரகலாதனை அரியணையில் அமர்த்தி பட்டாபிஷேகமும் செய்து வைத்தார். தொடர்ந்து வழிகாட்டவும் உறுதி அளித்தார். எனவே நரசிம்மர், ராஜபரிபாலனம் செய்ய உகந்தவர் என்று புகழப்படுகிறார். இதனால் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வெற்றி இலக்கை குறி வைத்து பூவரசன்குப்பம் தலத்து இறைவனிடம் சரண் அடைவது அதிகரித்தபடி உள்ளது.

அரசுப் பணிகளில் இருப்பவர்கள் மற்றும் பதவி உயர்வு பெற விரும்புபவர்கள் பூவரசன்குப்பம் தலத்துக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்துவிட்டு செல்கிறார்கள். இந்த வழிபாடு பூவரசன்குப்பம் தலத்தில் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது.