விடுதலைப் புலிகளின் தாக்குதலை நினைவுகூர அனுமதி மறுப்பு!

தலதா மாளிகை மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தினை நினைவுகூரும் வகையில் கண்டி மஹாமலுவ பிரதேசத்தில் இன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பூஜை வழிபாடுகள் நடத்த இடமளிக்கப்படவில்லை என தேசிய உரிமைகள் அமைப்பின் செயலாளர் பெங்கமுவே நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதே நாளில் 19 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டி தலதா மாளிகை மீது விடுதலைப் புலிகள் குண்டு தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதனை நினைவுகூரும் வகையில் இந்த வழிபாடு ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாகவும், நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசியல் தேவைக்கு அமைய தமது அமைப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இதன் மூலம் அரசாங்கத்தின் அரசியல்வாதிகளை மகிழ்விக்கும் விதம் தெளிவாகியுள்ளதாகவும் நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இப்படியான சம்பவங்களை தேசிய இனம் என்ற வகையில் மறக்கக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, 1998 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தலதா மாளிகை மீது நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்ததுடன் 25 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.