சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்றும் 3 பேருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா விதித்த 4 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தும் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
1991-1996 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி ஜெயலலிதா சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சிறை தண்டனை விதித்தார் . இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த தனிநீதிபதி குமாரசாமி அனைவரையும் விடுதலை செய்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த மனுவை நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்தது. இவ்வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்க கடந்த வாரம் கர்நாடகா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வலியுறுத்தி இருந்தார். அப்போது இன்னும் ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பினாக்கி கோஷ் தெரிவித்திருந்தார்.
இதனிடையே இன்று நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், சசிகலா இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஜெயலலிதா மரணமடைந்ததால் அவரை இவ்வழக்கில் இருந்து விடுவித்தது உச்சநீதிமன்றம்.
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய குற்றவாளிகள் 3 பேரும் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடையவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.