சரணடைய 4 வாரம் கால அவகாசம் கோரி சசிகலா சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கைவிடுக்கப்பட்ட நிலையில் அதை செவிமடுக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சிறை தண்டனை பெற்ற சசிகலாவை பெங்களூரு விசாரணை நீதிமன்றத்தில் நேற்றே ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் அவரோ நேரில் ஆஜராக 4 வாரங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சுப்ரீம்கோர்ட் இன்று ஏற்க மறுத்துள்ளது.
சசிகலாவின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வக்கீல் துள்சி இன்று ஆஜராகி வாய்மொழியாக இந்த கோரிக்கையைவிடுத்தார். ஆனால் சில வினாடிகள் கூட இந்த கோரிக்கையை செவிமடுக்க நீதியரசகர்கள் மறுத்துவிட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கியபினாக்கி சந்திர கோஷ், அமித்வா ராய் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அதே பெஞ்ச் முன்னிலையில்தான் சசிகலா தரப்பு இக்கோரிக்கையை இன்று வைத்திருந்தது.
ஆனால் நீதிபதிகளோ, ‘உடனடியாக சரணடைய வேண்டும் என்றால், அதற்கு அர்த்தம் உடனடியாக என்பதுதான்’ என அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டனர். இதனால் பதறியடித்த சசிகலா சென்னையிலிருந்து கார் மூலம் பெங்களூர் கிளம்பியுள்ளார்.