எத்தனை மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டாலும் அவரது மரணம் இயற்கையாக நடக்கவில்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் அவரது குடும்ப நண்பரும், தோழியுமான கீதா தெரிவித்தார்.
ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி இறந்த நாள் முதல் அவர் இயற்கையாக இறக்கவில்லை என்றும் கொலை செய்யப்பட்டார் என்றும் அவர் கொலை செய்யப்பட்டார் என்று கீதா பரபரப்பு புகாரை தெரிவித்தார்.
சசிகலாவை எதிர்த்து தனியாக வந்த ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை தேவை என்றபோதும், இத்தனை நாள்கள் பன்னீர் செல்வம் என்ன செய்து கொண்டிருந்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி தமிழக அரசு டெல்லியில் அறிக்கை வெளியிட்டது.
இதுகுறித்து கீதா கூறுகையில், எத்தனை மருத்துவ அறிக்கைகள் வெளியிட்டாலும் அதை நான் ஏற்க மாட்டேன். ஜெயலலிதா கொலை செய்யப்பட்டதனால்தான் இறந்தார்.
3 மாதங்கள் மௌனமாக இருந்து விட்டு தற்போது அறிக்கை வெளியிடுவதற்கான அவசியம் என்ன? ஜெயலலிதாவின் உண்மையான மருத்துவ அறிக்கை என்னிடம் உள்ளது. நான் யாருக்காகவும் பயப்படமாட்டேன். எனது தோழி ஜெயலலிதாவுக்கு நீதி கிடைக்க வேண்டும். ஒரு மாநிலத்தின் முதல்வருக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்னவாகும். என்னுடைய தொலைபேசி ஒட்டுகேட்கப்படுகிறது என்றார்.