தமிழக அரசியலில் விரைவில் பெரிய மாற்றம் வரும்.. துரைமுருகன் திடீர் பேச்சு

தமிழக அரசியலில் விரைவில் பெரிய மாற்றம் வரப்போகிறது என்று தி.மு.க. முதன்மை செயலாளரும், சட்டசபை எதிர்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன் தெரிவித்தார்.

சென்னை தி.நகரில் தி.மு.க. சார்பில் மறைந்த பழக்கடை கி.ஜெயராமன் 33-வது நினைவு நாள் மற்றும் இளைஞர் எழுச்சி நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட துரைமுருகன் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக போட்டா போட்டி அரசியல்தான் நடைபெறுகிறது. எம்.எல். ஏ.க்களை கடத்தி ஆடு, மாடு போல ரிசார்டுகளில் அடைத்து வைத்தல், பண பட்டுவாடா செய்தல் தான் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் எதுவும் நடைபெறவில்லை.

தமிழகத்தில் விரைவில் பெரிய மாறுதல் வரப்போகிறது. தேர்தல் வரும். அடுத்த 25 ஆண்டுக கால தமிழக அரசியல் மு.க.ஸ்டாலின் கையில் இருக்கும்.

கருணாநிதியைப் போல ஆளுமை திறன்மிக்கவராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அவருக்கு நிகர் யாரும் இல்லை. இந்த முறை நாம் ஆட்சிக்கு வந்தால் இன்னும் 25 ஆண்டு காலம் கட்சியிலும் ஆட்சியிலும் அமரும் சூழ்நிலை உருவாகும். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.