‘நாம் கொலை செய்யவில்லை’ நீதிமன்றில் பிள்ளையான் வாக்குவாதம்

த.தே.கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேதுரை சந்திரகாந்தன் தம் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.

இதில் பிள்ளையான் உள்ளிட்ட நால்வரும் தம் மீதான குற்றச்சாட்டை நிராகரித்து நீதிமன்றில் தர்க்கம் புரிந்துள்ளனர்.

குறித்த வழக்கு விசாரணைகள் மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.வை.எம் இசதீன் முன்னிலையில் இன்று விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே நீதிபதி முன்னிலையில் பிள்ளையான் உள்ளிட்ட நால்வரும் நாம் கொலை செய்யவில்லை என தம்மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர்.

தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம். இசதீன் உத்தரவிட்டுள்ளார்.

ஜோசப் பரராஜ சிங்கத்தின் படுகொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து பிரதிவாதிகள் நால்வருக்கும் எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.