கூட்டமைப்புக்குள் குளறுபடியா..? சுமந்திரனுக்கு எதிராக ரெலோ போர்க்கொடி..!

யுத்தக்குற்ற விசாரணை தொடர்பாக இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்படுவதை நியாயப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கும் கருத்துக்களை நிராகரிப்பதாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ தெரிவித்துள்ளது.

ரெலோ வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யுத்தக்குற்ற விசாரணைக்காக அரசாங்கம் இரண்டு வருட கால அவகாசத்தை கோரியுள்ளது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில், அதன் தலைவர் சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஆதரித்து நிற்பது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் நிலைப்பாட்டிற்கு எதிரானது.

யுத்தக்குற்ற விசாரணைக்கு கோரப்படும் இரண்டு வருட கால அவகாசத்தை ஆட்சேபித்து கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 11 பேரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு மனு அனுப்பியுள்ளது.

இந்நிலையில், குறித்த 11 பேரின் அரசியல் விவேகத்தை கேலி செய்யும் வகையில் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனால் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

மேலும், இந்த விடயத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தைக் கூட்டி முடிவு எதுவும் எடுக்கவில்லை.

அப்படியான நிலையில், கூட்டமைப்பின் பெயரில் ஒரு நிலைப்பாடு முன்வைக்கப்பட்டிருப்பது, கூட்டமைப்பின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாகியிருக்கின்றது.

யுத்தத்தின் கோர வடுக்களைச் சுமந்து நிற்கும் நிலையிலும், அரசியல் நீதியை தொடர்ந்து கோரி நிற்கும் தமிழ் மக்களின் சார்பில்செயற்பட்டு வந்திருக்கும் கூட்டமைப்பு, அரசியல் பேரத்திற்கும், சந்தர்ப்பவாத உடன்பாடுகளுக்கும் பலியாகத் தொடங்கியுள்ளது.

கூட்டமைப்பு என்பது அதில் அங்கம் வகிக்கும் எந்தவொரு கட்சியினதும் தனிச்சொத்து அல்ல. தமிழ் மக்கள் அளித்த ஆணைக்கு அமைவாக எந்தவொரு கட்சியோ அல்லது அரசியல் பிரமுகரோ கூட்டமைப்பின் கொடியின் கீழ் செயற்பட முடியவில்லை.

அப்படியாயின், அவர்களுக்கான உரிய வழிக்காக கூட்டமைப்பின் கதவுகள் திறந்தே வைக்கப்பட்டுள்ளன என்பதனை அழுத்தம் திருத்தமாக எமது கட்சி சொல்லி வைக்க விரும்புகின்றது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.