படையினர் குற்றமற்றவர்கள்! இன்று ஜெனீவாவில் விளக்கமளிக்கவுள்ள இலங்கை!

அரசாங்கப் படையினர் குற்றமற்றவர்கள் என இன்று ஜெனீவாவில் விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்றுள்ள ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, இந்த விளக்கத்தை அளிக்கவுள்ளார்.

இலங்கை அரசாங்கப் படையினர் வன்னிப் போரின் போது குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என அவர் தெளிவுபடுத்தவுள்ளார்.

வெளிநாட்டு நீதவான்களின் 7 விசாரணை அறிக்கைகள் உள்ளிட்ட விசாரணை அறிக்கைகளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னிடம் ஒப்படைக்கவுள்ளார்.

மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை படைத் தரப்பின் உறுப்பினர் ஒருவர் பங்கேற்று விளக்கம் அளிப்பது இதுவே முதல் தடவையாகும்.

இலங்கை மீதான போர்க்குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் குறித்து மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் சரத் வீரசேகர விளக்கம் அளிக்கவுள்ளார்.

இதேவேளை, சிவில் செயற்பட்டாளர் பாக்கியசோதி சரவணமுத்துவின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க உள்ளதாக சரத் வீரசேகர கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.