ஐ.நா சபையின் இளம் அமைதித் தூதராக மலாலா யூசப்சாய் நியமனம்

பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளி மாணவி மலாலா யூசப்சாய், பெண் குழந்தைகளுக்கான கல்வி உரிமைக்காக குரல் கொடுத்த காரணத்தால் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார். பின்னர், பலத்த காயத்துடன் மலாலா லண்டன் கொண்டு வரப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிர் பிழைத்த அவர், அதன் பிறகு நாடு திரும்பாமல் லண்டனிலேயே தங்கிவிட்டார்.

கடந்த 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்தியார்த்தி மற்றும் 19 வயதே ஆன மலாலா ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. தற்போது, பெண்களுக்கான கல்வி உரிமை மற்றும் சமூக அந்தஸ்து குறித்து உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மலாலா ஐ.நா சபையின் அமைதித் தூதராக வரும் திங்கட்கிழமை நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலாலா நியமனம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐ.நா சபையின் தலைவர் அண்டோனியோ கட்ரஸ் ,” மலாலாவின் அதிதீவிர நடவடிக்கையால் உலகம் முழுவதுமுள்ள பென் குழந்தைகளுக்கான கல்வி உரிமை குறித்து அனைவரும் உணர்ந்து விட்டனர். தற்போது ஐ.நா சபையின் மிக இளம் அமைதித் தூதராக அவர் நியமிக்கப்பட்டுள்ளது, மேலும், இந்த உலகை அமைதி வழியில் எடுத்துச் செல்லும்” எனக் கூறியுள்ளார்.