செங்கல் உற்பத்தியில் புதுமுறிப்பு இராணுவம்!!

கிளிநொச்சி, புதுமுறிப்பு கிராமத்தில் இராணுவத்தினர், செங்கல் உற்பத்தியில் ஈடுபடுவதன் காரணமாக, கிராமத்தின் சூழல் பாதிக்கப்பட்டு வருவதாக கிராமத்தின் பொது அமைப்புகள், கிளிநொச்சி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்த ரம் அருமைநாயகம் மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர் ஆகியோரிடம் இது தொடர்பில் மகஜர்களைக் கையளித்துள்ளதுடன் நேரடியாகவும் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் மக்களின் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது,

கடந்த 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், புதுமுறிப்பு பாடசாலைக்கு அருகிலும் புதுமுறிப்புக் குளத்தின் அணைக்கட்டுக்கு கீழ்ப்பகுதியிலும் அமைந்துள்ள இராணுவ முகாமில் இருந்து, செங்கல் உற்பத்தியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இரவு மற்றும் பகல் நேரங்களில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக செங்கற்களை வெளியிடங்களுக்குக் கொண்டு செல்கின்றனர்.

கடந்த 2010ஆம் ஆண்டில் அதிக இராணுவத்தினர் இம் முகாமில் இருந்த நிலையில், தற்போது இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இராணுவத்தினர் செங்கல் உற்பத்தியிலும், பயிர்ச் செய்கையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கல் உற்பத்திக்காக தோண்டப்பட்ட மண் குழிகளில், ஜெயந்தி நகரிலுள்ள 57, ஆவது இராணுவ படைத்தளத்தில் இருந்து, கழிவுப் பொருட்களை வாகனங்களில் கொண்டு வரப்பட்டு இந்த குழிகளில் கொட்ட ப்பட்டு குழிகள் மூடப்படுகின்றன.

இதன் காரணமாக, கிராமத்தின் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, புதுமுறிப்பு குளத்தின் கீழ் செங்கல் உற்பத்திக்காக குழிகள் தோண்டப்படுவதன் காரணமாக, குளத்தின் அணைக்கட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கிராமத்தின் சூழலையும் குளத்தின் அணைக்கட்டையும் பாதுகாப்பதுடன், இராணுவத்தினரின் செங்கல் உற்பத்தியை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புதுமுறிப்பு பொது அமைப்புகளும் அப் பகுதி மக்களும் மக்கள் பிரதிநிதிகள் மூலமாக அரச அதிபரிடம் கையளித்துள்ள மகஜரில் தெரிவி த்துள்ளார்கள்.